80 களில் கொடிகட்ட பறந்த இளையராஜா, அதன்பின் தனது வேகத்தை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டார். ராஜாவை விடவும் வேகமாக பரவியது ரஹ்மான் ஜுரம்! இந்த நேரத்தில் இவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் கூட விலகினர். காரணம், படத்தின் முழு கதையையும் கேட்கும் ராஜா, அதில் பல மாற்றங்களை சொல்வதாகவும், அப்படி மாற்ற விரும்பாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் கூறப்பட்டது.
பின்பு கீபோர்டு வைத்திருக்கிற எவரும் இசையமைப்பாளராகலாம் என்ற நிலை வந்தது. போட்டிகள் பெருகினாலும், தந்தையை போலவே பல மடங்கு புகழை சம்பாதித்தார் அவரது இளையமகன் யுவன் சங்கர் ராஜா. ஒரு படத்திற்கு ஒரு கோடி வாங்குகிற அளவுக்கு மார்க்கட்டின் உச்சத்தை தொட்ட யுவன், தற்போது ஆல்பம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டார். இன்னொருபுறம் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், என்று அடுத்தகட்ட இசையமைப்பாளர்கள் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது மீண்டும் ராஜாவின் கொடி உயர ஆரம்பித்திருக்கிறது. அவரது கைவசம் சுமார் 18 படங்கள் இருக்கிறதாம். ஹிந்தி, கன்னடம், மலையாளம் தமிழ் என்று பிசியாக இருக்கிறார். முன்பெல்லாம் கம்போசிங் செய்வதற்கு அவுட்டோர்களை நாடாத ராஜா, இப்போது தனது ஸ்டைலையும் மாற்றிக் கொண்டார் என்பதுதான் ஆச்சர்யம். மேற்படி படங்களுக்கு கம்போஸ் செய்வதற்காக திருவிதாங்கூர் பகுதியில், மிதக்கும் படகு வீடு ஒன்றில் தங்கியிருக்கிறாராம். சென்னை வரும்போது முத்து முத்தான ட்யூன்களோடு வருவார் என்பது மட்டும் உறுதி!
-ஆர்.எஸ்.